திங்கள், 21 மே, 2012

எய்ட்ஸ் ஒழிப்புக்காக "சுன்னத்' செய்து கொள்ள ஜிம்பாப்வே நாட்டு எம்.பி.,க்கள் முடிவு


லண்டன்: எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு பிரசாரத்துக்கு முன்னோடியாக, ஜிம்பாப்வே நாட்டு எம்.பி.,க்கள், 170 பேர் "சுன்னத்' செய்து கொள்ள முன்வந்துள்ளனர்.

ஒழுக்கக் குறைபாட்டின் காரணமாக, ஆப்ரிக்க நாடுகளில், எய்ட்ஸ் நோய் வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க, கடந்த 2010ம் ஆண்டு முதல், தீவிர பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுன்னத் செய்து கொள்வதால், எய்ட்ஸ் நோய் பரவும் வாய்ப்பு குறைவு என்பதால், ஆப்ரிக்க தலைவர்கள் பலர், சுன்னத் செய்து கொண்டுள்ளனர். ஜிம்பாப்வே நாட்டில், முஸ்லிம் அல்லாத இளைஞர்களும், "சுன்னத்' செய்து கொள்கின்றனர். ஜிம்பாப்வே நாட்டு பார்லிமென்டில், கடந்த வாரம், எய்ட்ஸ் தடுப்பு குறித்த பிரசார கருத்தரங்கு நடந்தது. இதில் பேசிய எம்.பி., ஒருவர், பெண்கள் அழகாக இருப்பதால், அவர்கள் மீது ஆண்களுக்கு ஆசை வருகிறது. எனவே, பெண்களுக்கு மொட்டை அடிக்க வேண்டும். இதன் மூலம், எய்ட்ஸ் நோய் பரவுவதை தடுக்கலாம்' என்றார். இதற்கு, பல தரப்பிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
எய்ட்ஸ் நோய் தடுப்பு விஷயத்தில், எம்.பி.,க்கள் முன் உதாரணமாக திகழ வேண்டும் என, தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதன்படி, 170 எம்.பி.,க்கள், "சுன்னத்' செய்து கொள்ள ஒப்புக் கொண்டுள்ளனர். பெண் எம்.பி.,க்கள், தங்கள் கணவருக்கு சுன்னத் செய்ய வற்புறுத்துவோம் என்று உறுதிமொழி ஏற்றுள்ளனர். முஸ்லிம் மத பெரியவர்களை கொண்டு, செய்வதற்கு பதில், மருத்துவர்களை கொண்டு, "சுன்னத்' செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக