6 Aug 2012
குவஹாத்தி:மண்ணின் மைந்தர்களான முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனக்கலவரத்திற்கு தலைமை தாங்கிய போடோலாண்ட் மக்கள் முன்னணி(பி.பி.எஃப்) எம்.எல்.ஏ பிரதீப் பிரம்மா கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அஸ்ஸாமில் மீண்டும் வன்முறை நிகழ்ந்துள்ளது. கலவரத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட கொக்ராஜரின் அருகில் உள்ள மாவட்டமான சிராங்கில் 5 பேர் கத்தியால் குத்தப்பட்டு படுகொலைச் செய்யப்பட்டுள்ளனர்.
பிஜினியில் சவுதரிபுராவில் சனிக்கிழமை மாலை 5 பேர் கத்தியால் குத்தப்பட்டு படுகொலைச் செய்யப்பட்டதாக அஸ்ஸாம் இன்ஸ்பெக்டர் ஜெனரல் எல்.ஆர்.பிஷ்னோய் பி.டி.ஏ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
வன்முறைச் சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கையாக கொக்ராஜரிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போடோலாண்ட் மக்கள் முன்னணி எம்.எல்.ஏவை கைது செய்தவுடன் அவரது ஆதரவாளர்கள் இச்சம்பவத்திற்கு பின்விளைவுகளை சந்திக்க வேண்டிவரும் என்று அரசுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தனர். பி.பி.எஃப் காலவரையற்ற முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்தைத் தொடர்ந்து கலவரத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மக்கள் வாழ்க்கை துயரமாகிப் போனது. இந்நிலையில் உடல் நலக்குறைவு எனக்கூறிய பிரதீப் பிரம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக