ஞாயிறு, 4 நவம்பர், 2012

பிரபல இஸ்லாமிய எழுத்தாளர் மரியம் ஜமீலா மரணம்!


லாகூர்:பிரபல இஸ்லாமிய அழைப்பாளரும், சிந்தனையாளரும், எழுத்தாளருமான மரியம் ஜமீலா அவர்கள் கடந்த அக்டோபர் 31-ம் தேதி லாகூரில் மரணம் அடைந்தார். நீண்ட நாட்கள் நோய் வாய்ப்பட்டிருந்த அவருக்கு வயது 78. அமெரிக்காவில் ஒரு நடுத்தர யூதக் குடும்பத்தில் 1934-ம் ஆண்டு மார்கரட் மார்கஸ் பிறந்தார். நியூயார்க்கில் யூதப் பெண்மணியாக வளர்ந்த மார்கரட் மார்கஸ் தனது பத்தாவது வயதிலேயே இஸ்லாமால் ஈர்க்கப்பட்டார். 1961ம் ஆண்டு தனது 27வது வயதில் இஸ்லாமைத் தழுவினார். தன் பெயரை மரியம் ஜமீலாவாக மாற்றினார். பின்னர் 1962ம் ஆண்டு லாகூர் வந்தார். ஜமாஅத்தே இஸ்லாமியின் நிறுவனர் மௌலானா செய்யித் அபுல் அஃலா மௌதூதி அவர்கள் மரியம் ஜமீலாவை தன் வளர்ப்பு மகளாகத் தத்தெடுத்தார். அதன் பின் மரியம் ஜமீலா அமெரிக்காவுக்குத் திரும்பவே இல்லை. லாகூரிலேயே தங்கி விட்டார். 1960களிலிருந்து 1980களின் நடுப்பகுதி வரை மரியம் ஜமீலா நிறைய நூல்களை எழுதினார். அவை பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அவர் எழுதிய நூல்கள் இஸ்லாமிய உலகில் மிகுந்த வரவேற்பைப் பெற்றன. மேலை நாடுகளுக்கும், இஸ்லாமிற்கும் உள்ள வேறுபாடுகளைத் தோலுரித்துக் காட்டும் அவரது எழுத்துகள் பல மேலை நாட்டவரை இஸ்லாம் குறித்து புரிந்துகொள்ள உதவியது. இஸ்லாம் எதிர் மேற்குலகம் (Islam Versus The West), இஸ்லாமும், நவீனத்துவமும் (Islam and Modernism), கொள்கையிலும், நடைமுறையிலும் இஸ்லாம் (Islam in Theory and Practice), இஸ்லாமும், கிழக்கத்தியவாதமும் (Islam and Orientalism), யார் இந்த மௌதூதி? (Who is Moududi?), நான் ஏன் இஸ்லாம் தழுவினேன்? (Why I embraced Islam?) உட்பட 25க்கும் மேற்பட்ட நூல்களையும், கட்டுரைகளையும் மரியம் ஜமீலா எழுதியுள்ளார். நவீன கால முஜாஹித்களின் வரலாறுகளையும் மரியம் ஜமீலா எழுதியுள்ளார். ரஷ்ய ஸார் மன்னனை எதிர்த்துப் போராடிய இமாம் ஷாமில், இத்தாலிய சர்வாதிகாரி முசோலினியை எதிர்த்துப் போராடி தூக்கு மரம் ஏறிய லிபியாவின் பாலைவனச் சிங்கம் உமர் முஃக்தார், வட இந்தியாவில் பிறந்து இஸ்லாமிய எழுச்சியை ஏற்படுத்திய செய்யத் அஹமத் ஷஹீத் ஆகியோரின் வரலாறுகள் அதில் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக