செவ்வாய், 31 ஜூலை, 2012

நாகர்கோவில்:வீடுகள் மீது கல்வீச்சு! – நள்ளிரவில் முஸ்லிம்கள் சாலை மறியல்!

குற்றவாளிகளை கைது செய்யக்கோரி நடந்த மறியல் போராட்டம்2
நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள இடலாக்குடி முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஊர் ஆகும். இடலாக்குடியில் ஆஸாத் கார்டன் மற்றும் ரஹ்மத் நகர் பகுதிகளில் நேற்று சில மர்ம நபர்கள் முஸ்லிம் ஆண்கள் ரமலான் இரவு சிறப்புத் தொழுகைக்கு(தராவீஹ்) சென்ற வேளையில் வீடுகள் மீது கல்வீசி தாக்கியுள்ளனர். இத்தாக்குதலில் ஷேக் மன்சூர், அஹ்மத் கான், நூர்ஜஹான் ஆகியோரது வீடுகள் சேதமடைந்தன. இதனால் அப்பகுதி முஸ்லிம்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.
இச்சம்பவத்தை கண்டித்து அப்பகுதியில் வாழும்  ஆண்கள், பெண்கள் என 500-க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் நள்ளிரவு 11 மணி அளவில் திரண்டு வந்து நாகர்கோவில்-கன்னியாகுமரி மெயின் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். கல்வீச்சில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்யக்கோரி நடந்த மறியல் போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மறியலைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார், டி.எஸ்.பி.பாஸ்கரன் ஆகியோர் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். டி.எஸ்.பி. பாஸ்கரன் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
கல்வீச்சு தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுத்தால் உடனடியாக வழக்குப் பதிவு செய்யப்படும், கல்வீச்சில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரணை நடத்தி அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதையேற்று பொதுமக்கள் 1 மணிக்கு சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் 3 மணி நேரம் பரபரப்பு நிலவியது.
அண்மையில் நாகர்கோவில் பறக்கை ரோட்டைசேர்ந்த ஆட்டோ டிரைவர் ரமேஷ் கொலையை தொடர்ந்து நடந்த கல்வீச்சு சம்பவத்தால் அந்த பகுதியில் 10 நாட்களாக போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பில் ஈடுபட்டனர். நிலைமை கட்டுக்குள் வந்ததை தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு குறைக்கப்பட்டது. இந்தநிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு பறக்கை ரோட்டில் உள்ள பிஸ்மி நகரில் காஜா நஜ்முதீன், ஜாகிர் உசேன் ஆகியோரது வீடுகள் முன்பு நிறுத்தியிருந்த கார் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டது. மேலும் வீடுகள் மீது பெட்ரோல் குண்டுகளும் வீசப்பட்டன. இதனால் அந்த பகுதியில் மீண்டும் பதட்டம் நிலவியது.
இதையடுத்து பிஸ்மிநகர், வெள்ளாடிச்சிவிளை உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். மேலும் ரோந்து வாகனத்திலும் சுற்றி வந்து கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்று மீண்டும் வீடுகள் மீது கல்வீசப்பட்ட சம்பவம் பதட்டத்தை மேலும் அதிகரித்துள்ளது. இதனால் இடலாக்குடி, பறக்கை ரோடு, பிஸ்மிநகர், இளங்கடை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே கல்வீச்சு தொடர்பாக ஷேக்மன்சூர், அகமதுகான், நூர்ஜஹான் ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில் கோட்டார் போலீசார் தனித்தனியாக வழக்குப் பதிவு செய்து கல்வீச்சில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசாரின் மெத்தனப்போக்கா குற்றவாளிகளுக்கு தூண்டுகோலாக அமைகிறது? என்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹிந்துத்துவா பயங்கரவாதிகள்தாம் இத்தாக்குதலின் பின்னணியில் செயல்பட்டிருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக