சனி, 21 ஜூலை, 2012

ரோஹிங்கியா முஸ்லிம்களிடம் ராணுவம் பாரபட்சமாக நடந்துகொள்கிறது: ஆம்னஸ்டி!

Burmese Gov’t Will Not Recognize 800,000 Rohingya Citizens
பாங்காக்:ரோஹிங்கியா முஸ்லிம்களிடம் மியான்மர் ராணுவம் கடுமையான பாரட்சத்தை காட்டுவதாக சர்வதேச மனித உரிமை அமைப்பான ஆம்னஸ்டி இண்டர்நேசனல் தெரிவித்துள்ளது.
ரோஹிங்கியா முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் அநியாயமாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சிறையில் கொடூரமாக சித்திரவதைச் செய்யப்படுகின்றனர் என்று புகார் எழுந்துள்ளது.
முஸ்லிம்களுக்கு எதிரான பெரும்பாலான கைது நடவடிக்கைகளும் சட்டவிரோதமானதும், பாரபட்சமானதுமாகும் என ஆம்னஸ்டி அறிக்கையில் கூறியுள்ளது.
மோதல் முடிவுக்கு வந்த பிறகும், கடந்த ஆறுவாரங்களாக முஸ்லிம்களுக்கு எதிராக ராணுவ கடுமையான மனித உரிமை மீறல்களை புரிந்துவருகிறது.
பாலியல் கொடுமை, கொலைகள், சொத்துக்களை சூறையாடல், கொள்ளையடித்தல் போன்ற கொடிய குற்றங்கள் மியான்மரில் நடந்துள்ளதாக நம்பத்தகுந்த அறிக்கைகள் வெளியாகியுள்ளதாக ஆம்னஸ்டி தெரிவிக்கிறது.
ரோஹிங்கியா முஸ்லிம்களை மியான்மரில் இருந்து விரட்டியடித்து ஐ.நா அகதிகள் முகாமில் தள்ளுவோம் என அந்நாட்டின் ராணுவ ஆட்சியாளர் தைன் ஸைன் சூளுரைத்திருந்தார்.
பங்களாதேஷ், சீனா ஆகிய நாடுகளில் இருந்து குடியேறியவர்கள் என்பதால் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு  மியான்மர் குடியுரிமை கூட வழங்கமாட்டோம் என்பது மியான்மரின் கொடுங்கோல் ராணுவ அரசின் வாதமாகும்.
எட்டு லட்சத்திற்கும் மேற்பட்ட ரோஹிங்கியா முஸ்லிம்களை ஒடுக்குவதற்கு அரசு முயல்வதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. ரோஹிங்கியா முஸ்லிம்களை இனப்படுகொலை செய்வதில் ராணுவமும் ஈடுபட்டிருந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
மே இறுதியில் துவங்கிய கலவரம் தற்பொழுதும் தொடர்வதாக ஆம்னஸ்டி கூறுகிறது. பெளத்தர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே ஏற்பட்ட கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் கொலைச் செய்யப்பட்டனர். ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் அண்டை நாடுகளான பங்களாதேஷ், பாகிஸ்தான், இந்தியா ஆகிய நாடுகளுக்கு புலன்பெயர்ந்து வருகின்றனர்.
அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சூகி ரோஹிங்கியா முஸ்லிம்களின் இனப்படுகொலை சம்பவத்தில் தலையிட மறுக்கிறார் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக