செவ்வாய், 11 செப்டம்பர், 2012

கூடங்குளம் போராட்டம் நியாயம் தானா ?


கூடங்குளம் போராட்டம் நியாயம் தானா ? கடந்த சில நாட்களாக கூடங்குளம் பிரச்சினை அனைத்து ஊடகங்களையும் ஆக்கிரமித்து கொண்டுள்ளது. முற்றுகை போராட்டம் என்று அறிவிக்கும் போதே இது ஒரு பிரச்சினைக்கான துவக்கமோ என்று பலரும் நினைத்தார்கள். அது போன்றே நடந்து விட்டது. ஊடகங்களுக்கும் வெறும் வாய்க்கு அவல் கிடைத்தது போல் இதை வைத்து இன்னும் கொஞ்ச காலம் ஓட்டி விடலாம் என்று நினைக்கிறது . கூடங்குளம் அணுமின் நிலையம் பற்றிய தகவல்கள், நிலவரங்கள் கடந்த வருடமே பல பத்திரிகைகளில் ( புதிய தலைமுறை, உணர்வு, தின மலர் ... ) விரிவாக வெளி வந்து விட்டது. இருந்தாலும் facebook சமூக வலைத்தளம் ஒன்றில் நாம் எழுதிய சிறு கமெண்டுக்கு அதிகமான விமர்சனங்கள் வந்தன. அனைத்தும் எதுவும் ஆதாரங்கள் அடிப்படையில் இல்லாமல் சும்மா உணர்ச்சி வசப்பட்ட நிலையில் எழுதப் பட்டவை. கூடங்குளம் ஓர் பார்வை : திருநெல்வேலியில் இருந்து சுமார் 80 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது கூடங்குளம். இங்கு தான் 1000 மெகா வாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இரண்டு அணு உலைகள் துவங்க உள்ளன. இதில் யுரனியம் நிரப்புவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தான் இந்த கலவரம். இந்த இரண்டு அணு உலைகளுக்கான செலவு மட்டும் சுமார் 13 ஆயிரம் கோடிகளை தாண்டி விடுகிறது. இது ரஷ்யத் தொழில் நுட்பத்தின் அடிப்படையில் அமைக்கப் பட்டு வருகிறது. ஒருவேளை அமெரிக்க்காவின் ஆதரவில் அமைக்கப் பட்டால் இந்த களேபரம் வராதோ என்று நினைக்குமளவுக்கு மத ரீதியிலான போராட்டமாகவே இது பார்க்கப் படுகிறது. கம்யுனிச ரஸ்யாவால் இந்த அணு உலை அமைக்கப் படுவதால் தான் இந்த போராட்டம் என்று பலர் கூறுவதும் கேட்கத்தான் செய்கிறது. மேலும் ஒரு அணுமின் நிலையத்தை சில மாதங்களில் கட்டி முடித்து உற்பத்தியை துவங்கி விட முடியாது. இந்த அணு உலை அமைப்பதற்கான ஒப்பந்தம் 23 ஆண்டுகளுக்கு முன்பே 1988 ல் ராஜீவ் காந்தி - கோர்பசேவ் இடையே போடப் பட்டது. ஆனால் இதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பே அடிப்படை ஆயத்த வேலைகள் துவக்கப் பட்டன. இந்த திட்டத்திற்கு தேவையான நிலத்தை அந்தப் பகுதி மக்களின் ஆதரவோடுதான் விலைக்கு வாங்கப் பட்டது என்று அரசு அதிகாரிகள் குறிப்பிடுகிறார்கள். மக்கள் ஆதரவு இல்லாமல் இடத்தை வாங்கவும் முடியாது என்பது நிதர்சனம். கடந்த 20 ஆண்டுகளாக கட்டுமானப் பணிகள் நடந்து இப்போது மின் உற்பத்திக்கு தயாராக உள்ளது. துவக்கத்தில் எதிர்ப்பு காட்டி இதை நிறுத்தி இருக்கலாம். ஆனால் இத்தனை கோடி செலவான பிறகு இப்போது நிறுத்த முயற்சிப்பது எந்த வகையில் நியாயம் என்பது தான் சிந்தனையாளர்களின் கருத்து. உலகில் உருவான எந்த ஒரு கண்டுபிடிப்பிற்கு பின்னும் ஆபத்துகள் இல்லாமல் இல்லை. விமானத்தில் சென்றால் விபத்து ஏற்படும் என்பதற்காக விமானத்தையே தடை செய்ய முடியாது. எத்தனையோ லட்சம் பேர்களின் தியாகத்தில் தான் இன்றைய நவீன யுக கண்டுபிப்புகள் எல்லாம் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. நாளைக்கு வரும் விசயத்திற்காக இன்றைக்கு தடுப்பு நடவடிக்கை தான் மேற்கொள்ள முடியும். பாதுகாப்பில் குறை பாடுள்ளதோ என்று தான் ஆராய வேண்டுமேயொழிய கொசுத் தொல்லைகாக வீட்டை கொளுத்த முடியாது. அணு உலைகளை விட ஆபத்தான நுன்னுயிர் தொழிற்சாலைகளையே நாம் கண்டு கொள்வதில்லை. இதை விட முக்கியமான விஷயம் இந்த அணு மின் நிலையத்திகுள்ளே நூற்றுக்கணக்கான விஞ்ஜானிகள் வேலை பார்கிறார்கள். அணு உலை வெடித்தால் முதலில் மரணமடைபவர்கள் அவர்கள் தான். அவர்களே அணு உலைனால் ஆபத்து இல்லை என்கிறார்கள். அணு உலைகளின் அபாயத்தை பற்றி அதிகம் தெரிந்தவர்கள் அவர்கள்தான். அப்படி என்றால் ஒன்றுமறியாத மக்களை வைத்து சிலர் விளையாடுவது போல்தான் தோன்றுகிறது. இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கூட அணு உலை ஆபத்து இல்லை என்று தான் கூறுகிறார் . இதை உணர்ச்சி பூர்வமாக ஆக்காமல் அறிவுப் பூர்வமாக சிந்திக்க வேண்டும். அணு மின் நிலையம் அமைக்க கூடங்குளத்தை ஏன் தேர்ந்தெடுத்தார்கள் ? 1 . அணுமின் நிலையம் அமைந்துள்ள கூடங்குளம் பகுதி பூகம்ப அபாயம் மிகக் குறைவான பகுதி. 2 . பூமிக்கு அடியில் கடினமான பாறைகள் இருப்பதால் அணு உலைகளின் கான்கிரீட் அடித்தளத்திற்கு சிறந்தது. 3 . மிகப் பெரிய நில அதிர்வு வந்தாலும் உள்கட்டமைப்பு பாதிக்காத வகையில் முழுமையாக இயங்கலாம். 4 . இங்குள்ள கட்டிடங்களின் தரை உயரம் கடல் மட்டத்திலிருந்து 7 .5 மீட்டர் உயரத்தில் உள்ளது. 5. ஒருவேளை நில அதிர்வு ஏற்பட்டால் சுனாமி யால் பாதிப்பு ஏற்படாத வகையில் கடல் நீர்மட்டத்தை கணக்கிட்டு தான் அணு உலை அமைக்கப் பட்டுள்ளது. 6 . தேவைக்கு ஏற்ற நீர் கடலில் உள்ளது. 7 . அணு உலையில் இருந்து 1 .2 மைல் தூரத்திற்கு 18 மைல் சுற்றளவில் நெருக்கமான அதிக மக்கள் தொகை கொண்ட ஊர் கிடையாது. 8. இது விவசாயத்திற்கு பயன்படாத வறண்ட பூமி. 9 . ரயில், கப்பல், சாலை என்று போக்குவரத்து வசதி சிரமம் இல்லை. 10 . விமான விபத்து, ரசாயன விபத்து, ராணுவ ஆபத்து எதுவும் இல்லை. மேற்குறிப்பிட்ட இத்தனை அம்சங்களை அடிப்படையாக கொண்டு ஆய்வு செய்துதான் கூடங்குளத்தை தேர்ந்தெடுத்துள்ளார்கள். சும்மா எல்லா பகுதிகளையும் அணு உலை அமைக்க உபயோகப் படுத்த முடியாது. இந்தியாவில் மட்டுமா ? அணு உலைகள் உலகம் முழுவதும் 31 நாடுகளில் 44o இடங்களில் அமைக்கப் பட்டுள்ளது. உலகின் கலாசார சிகரம் எனப்படும் அமெரிக்காவில் (அமெரிக்கர்கள் தங்கள் உயிருக்கு பயப்படுபவர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். அடுத்தவர் உயிரைப் பற்றி கவலை படமாட்டார்கள் அங்கு ) மட்டுமே 104 அணு உலைகள் உள்ளன. பிரான்ஸ் நாட்டில் 59 ம், பூகம்பத்தால் பதிக்கப் படுகிற ஜப்பானில் 55 அணுமின் நிலையங்கள் உள்ளன. ஏன் இந்தியாவில் தமிழ் நாட்டில் உள்ள கல்பாக்கம் உட்பட 17 அணுமின் நிலையங்கள் இயங்கி வருகின்றன. இந்தியாவில் அணுமின் நிலையங்களை இயக்க திறமையுள்ள , துணிச்சல் உள்ள ஏராளமான் நிபுணர்கள் உள்ளனர் என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம். அணு உலைவெடித்து சிதறினால் , கதிரியக்கம் வெளியானால் ஆபத்து என்பது மறுக்க முடியாத உண்மைதான் . அதற்காக எல்லா அணு உலைகளும் கண்டிப்பாக வெடித்தே தீரும் என்று அச்சப் பட வேண்டிய அவசியம் இல்லை. அபுல் ஹசன் - தக்கலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக