வெள்ளி, 7 செப்டம்பர், 2012

முஸ்லிம் இளைஞர்களின் கைது: ஜோடிக்கப்பட்டது – மனித உரிமை ஆர்வலர்கள்!


6 Sep 2012 பெங்களூர்:முக்கிய பிரமுகர்களை கொலைச் செய்ய சதித்திட்டம் தீட்டினார்கள் என குற்றம் சாட்டி உயர் கல்வி கற்ற முஸ்லிம் இளைஞர்களை கைது செய்த கர்நாடகா போலீஸின் நடவடிக்கை அடுத்த தேர்தலை இலக்காக கொண்ட வகுப்பு பிரிவினைவாத அஜண்டா என்று மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன. கோமு நல்லிணக்க பேரவையின் தலைமையில் பெங்களூர் ப்ரஸ் க்ளப்பில் நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் மனித உரிமை ஆர்வலர்கள் கர்நாடகா க்ரைம் ப்ராஞ்ச் போலீசாரின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்தனர். போலீசார் பொய் கதைகளை இட்டுக் கட்டியுள்ளார்கள். எஃப்.ஐ.ஆர் மற்றும் போலீஸ் ஆவணங்களில்இருந்து இவ்வழக்கு ஜோடிக்கப்பட்டது என்று மூத்த உயர்நீதிமன்ற வழக்கறிஞரும், முன்னாள் பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவருமான வழக்கறிஞர் எ.கே.சுப்பைய்யா கூறினார். மேலும் அவர் கூறியது: ” ‘கன்னடபிரபு’ என்ற நாளிதழின் கட்டுரையாளர் பிரதாப் சிம்ஹாவின் நண்பருடைய வீட்டுக்கு அருகில் இருந்து இரண்டு முஸ்லிம் இளைஞர்களை கைது செய்ததாக எஃப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், 29-ஆம் தேதி காலை ஐந்து இளைஞர்களை அவர்களுடைய வீட்டில் இருந்து கைது செய்ததற்கான ஆவணங்கள் உள்ளன. தங்களுடைய பிள்ளைகளை காணவில்லை என கூறி பெற்றோர்கள் அளித்த புகாரும் போலீஸாரின் ஆவணத்தில் உள்ளது. க்ரைம் ப்ராஞ்சை வழக்கு விசாரணையில் இருந்து விடுவிக்க வேண்டும். நேர்மையான, மதசார்பற்ற கொள்கையையுடைய புலனாய்வு குழு வழக்கை விசாரிக்க கோரி நீதிமன்றத்தை அணுகுவோம். உயர் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் விசாரணை நடைபெறவேண்டும். ஆர்.எஸ்.எஸ்ஸின் கட்டளையின் படியே தற்பொழுது விசாரணை நடைபெற்று வருகிறதோ? என சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அரசுக்கு எதிரான போராட்டம் நடத்தும் முஸ்லிம் அல்லாதவர்களை நக்ஸலைட்டுகளாக முத்திரைக் குத்திக் கைது செய்வதும், முஸ்லிம் இளைஞர்களை தீவிரவாத தாக்குதல் வழக்குகளில் சேர்த்து கைது செய்வதும் தேச முழுவதும் நடந்துவரும் வழக்கமாகிவிட்டது. காங்கிரஸும்,பா.ஜ.கவும் இவ்விவகாரத்தில் ஒன்றாகவே செயல்படுகின்றன. ” இவ்வாறு சுப்பையா கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக