திங்கள், 22 அக்டோபர், 2012

ஹஜ் பயணிகளுக்காக ரியாதில் மாபெரும் இரத்த தான முகாம்! 150 லிட்டர் இரத்தம் தானம்!


இரத்த தானங்கள் செய்து உயிர்களைக் காப்பதில் தொடர்ந்து ஐந்து வருடங்களாக தமிழகத்தில் முதலிடத்தில் இருந்து வரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், பல கேடயங்களையும் பாராட்டுக்களையும் பெற்றதை அனைவரும் அறிவர். தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் இந்த இரத்ததான சேவையை அது செய்து வருகின்றது. தற்போது உலகம் முழுவதிலிருமிருந்து முஸ்லிம்கள் ஹஜ் செய்வதற்காக மக்கா மாநகருக்கு வந்திருப்பதால் அவர்களில் தேவைப்படுவோருக்கு அவசர காலத்தில் வழங்குவதற்காக ஒரு முகாமை ஏற்பாடு செய்ய வேண்டுமென கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டி மருத்துவமனையினர் (KFMC) ரியாத் TNTJ-விடம் வேண்டுகோள் விடுத்தனர். அதனை ஏற்ற ரியாத் TNTJ, கடந்த 19.10.2012 வெள்ளிக்கிழமையன்று மாபெரும் 21 ஆவது இரத்த தான முகாமை நடத்தியது. இது ஹஜ் பயணிகளுக்காக ஒவ்வொரு வருடமும் தொடர்ச்சியாக நடத்தப்பெறும் 6 ஆவது முகாம் ஆகும். இந்த முகாமில் 375 க்கும் மேற்பட்ட சகோதர-சகோதரிகள் கலந்து கொண்டனர். காலை 9 மணிக்கு துவங்கும் என அறிவிக்கப்பட்ட முகாமில், கொடையாளிகள் கூட்டம் அலை மோதியதால், காலை 8.45 மணிக்கே துவங்கியது.
இம்முகாமில் பெண்கள் உட்பட 333 பேரிடம் மட்டும் இரத்தம் பெறப்பட்டது. இரத்த அழுத்தம் அதிகம், ஹீமோகுளோபின் குறைவு, ஹஜ்ஜூக்கான தடுப்பூசி போன்ற காரணங்களுக்காக பல சகோதர-சகோதரிகளால் இரத்தம் வழங்க முடியவில்லை. காலையிலிருந்து தொடர்ச்சியாக பணியாற்றும் இரத்த வங்கி ஊழியர்கள் களைப்புற்ற காரணத்தால், இத்துடன் முடித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ள மாலை 5.15 மணியோடு இரத்த தானம் நிறுத்திக் கொள்ளப்பட்டது. 2011 இல் நடந்த ஹஜ்ஜூக்கான முகாமில் 135 லிட்டர் இரத்தம் பெறப்பட்டது. இம்முறை 150 லிட்டர் இரத்ததிற்கு மேல் பெறப்பட்டது இதுவே முதல் முறை. இரத்த தானம் செய்தவர்கள் அனைவருக்கும் காலை சிற்றுண்டியும், சிறப்பு மதிய உணவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ரியாத் மண்டலத்தின் இரத்த தான பொறுப்பாளர்கள் சகோ. அப்துர்ரஹ்மான் நவ்லக், சகோ. மாஹீன் & சகோ. ஷேக் அப்துல் காதர் மற்றும் மண்டல நிர்வாகிகளின் ஏற்பாட்டில், சிறப்பாக முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக